காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
தற்போது படிப்படியாக அங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடிகையாக இருந்து அரசியல்வாதியான ஊர்மிளா மாடோண்கர் மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார். கடந்த 22 நாட்களாக காஷ்மீரில் வசிக்கும் பெற்றோருடன் அவரது கணவர் பேச முடியவில்லை என்று அவர் கூறினார்.
370 வது பிரிவை ரத்து செய்வது மட்டுமல்ல. இது மனிதாபிமானமற்ற முறையில் செய்யப்பட்டது. என் மாமனார் மற்றும் மாமியார் அங்கே இருக்கிறார்கள். இருவரும் நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள். இன்று 22 வது நாள் ஆகிறது நானோ என் கணவரோ அவர்களிடம் பேச முடியவில்லை. அவர்கள் வீட்டில் மருந்துகள் இருந்ததா, இல்லையா என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை என கூறினார்.